டயானாவிற்கு வரவுள்ள மற்றுமொரு சிக்கல்: சம்பளம் மீளப் பெறப்படுமா?

#SriLanka #Parliament #Court Order
Mayoorikka
1 week ago
டயானாவிற்கு வரவுள்ள மற்றுமொரு சிக்கல்: சம்பளம் மீளப் பெறப்படுமா?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

 டயானா கமகேவுக்கு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்பதால், அதனை பூரண நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

 குறித்த தீர்ப்பு தொடர்பில் டயானா கமகேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார். "அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது, பூரண உயர் நீதிமன்ற அமர்வில் கோரிக்கை விடுப்பதற்கு. ஏனெனில் மூன்று பேர் கொண்ட அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அத்தகைய தீர்ப்பை பூரண அமர்வில் சவால் செய்யலாம். அவருக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அக்கட்சியைச் சேர்ந்த எவரும் தேசியப்பட்டியலில் இருந்து வரலாம். எனவே இந்த இரண்டில் எது முதலில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.

 இதேவேளை, பாராளுமன்றத்தில் அமருவதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் டயானா கமகேயின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டப்பூர்வத்தன்மை குறித்தும், பிரதிபா மஹாநாமஹேவா கருத்து வௌியிட்டார். “இந்தக் கட்சி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்தக் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். செயலாளரும், கட்சித் தவிசாளரும் உள்ளனர்.

 இந்த தீர்ப்பின் ஊடாக இந்த கட்சிப் பதிவு சட்டவிரோதமா என்ற அடுத்த கேள்வி வரும். அத்தகைய பதிவைச் சவாலுக்கு உட்படுத்து வேண்டுமானால், வேறு பல தரப்பினரும் பிரதிவாதிகளாக முன்வைக்கப்பட வேண்டும். இதை இன்னொரு வழக்காக கொண்டு வர வேண்டும். இந்த எம்.பி, 4 ஆண்டுகளாக சம்பளம் பெற்றுள்ளார். அவர் இலங்கை பிரஜை இல்லை என்றால் மோசடியாகவே சம்பளம் பெற்றுள்ளார். எனவே அவற்றையும் வசூலிக்க வேண்டும். பின்னர் அது ஒரு தனி வழக்கில் வர வேண்டும்" என்றார்.