வெடுக்குநாறி மலை விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
வெடுக்குநாறி மலை விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப் பேர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வடகிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பில் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.  

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (18.03) ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.  

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.