இலங்கை - இந்தோனேசியாவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம்!

#SriLanka
Mayoorikka
1 month ago
இலங்கை - இந்தோனேசியாவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம்!

இலங்கை - இந்தோனேசியாவுக்கு இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருப்பதுடன், இது இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 இலங்கை சார்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவினருக்கும், இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு வர்த்தகத்துறை பிரதியமைச்சர் ஜெர்ரி சம்புவகா தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை (14) நிகழ்நிலை முறைமையில் நடைபெற்றன.

 இதன்போது கருத்து வெளியிட்ட இருநாடுகளினதும் அமைச்சர்கள் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான தொடக்க நகர்வாக அமையுமென நம்பிக்கை வெளியிட்டனர்.

 அதேபோன்று இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதிலும், உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக பயனளிக்கக்கூடிய சந்தை வாய்ப்பை அடைந்துகொள்வதிலும் இருநாடுகளும் கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

 மேலும் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் செயற்திறன்மிக்க வகையில் முன்னெடுக்கப்படும் எனவும், அதன் முதலாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இருநாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியொன்றில் நடைபெறும் எனவும் இக்கலந்துரையாடலின்போது பரஸ்பர இணக்கம் எட்டப்பட்டது.