போலி விசாவில் கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!

#SriLanka #Canada #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
போலி விசாவில் கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!

கனடவாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞர் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாகவும், இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளனர். 

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபரின் இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள உறவினர் ஒருவர் தனக்கு உதவியதாகவும், கனடாவில் உள்ள நபர் இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை கொடுத்து இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.