பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்கவுள்ள சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

#SriLanka #Parliament #Vedukunarimalai Adilingeswarar Temple
Mayoorikka
1 month ago
பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்கவுள்ள சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வவுனியா வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னனி பகிஸ்கரிக்க தயார் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களை கடந்த சனிக்கிழமை மதியம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 தமிழர்களுக்கு எதிராக புதிது புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு கைது செய்யப்படுகின்ற நிலைமையே காணப்படுகிறது. இதுவே வெடுக்குநாறி விடயத்திலும் நடந்தது. பொய் குற்றச்சாட்டுக்களை போட்டு அவர்களை இன்று சிறை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்கின்ற ஒரு அமைப்பு பாராளுமன்றத்தை தமிழ் பிரதிநிதிகள் பகிஸ்கரிக்க வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். 

 எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு கலந்துரையாடியதன் பிரகாரம் எமது கட்சி உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம். அதனடிப்படையில் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி பூரண ஆதரவை வழங்குவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிடம் தெரிவித்து இருக்கின்றோம். 

 இது தொடர்பில் ஆறு.திருமுருகன் மற்றும் அகத்தியார் அடிகளாருடனும் பேசி அந்த முடிவுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து இருக்கிறோம். எனினும் 19ஆம் 20 ஆம் திகதிகளில் நியாயப்பாடுகள் இல்லாமல் பக்கச் சார்பாக செயற்படுகின்ற சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு வருகின்றது. 

இருபதாம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. ஆகவே, இந்த பாராளுமன்ற அமர்வுக்கு செல்லாமல் பகிஸ்கரித்தால் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போகும். அங்கு எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போகும் நிலைமையும் உருவாகும். இது தொடர்பில் அழைப்பு விடுத்த ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 அதுக்கும் அப்பால் ஜனாதிபதியை பாதுகாப்பதற்கும், இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதனை மூடி மறைப்பதற்கும், இலங்கை பொருளாதார நிலைமையில் இருந்து காப்பாற்றுவதாக கூறி ஐஎம்எப்க்காக அரசோடு ஒட்டியதுடன், அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை என தெரிவித்து இதற்கு முன்பு செயற்படும் அமைப்புக்கள் இன்று இவர்கள் பற்றி பேசுகிறது. 

அந்த சந்திப்பு அவர்களது விடுதலையை சாத்தியமாக்குமாக இருந்தால் அது தொடர்பாக நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. இவர்களது விடுதலைக்கு யார் முயற்சி எடுத்தாலும் நாங்கள் அதற்கு தடையாக இருக்கப் போவதுமில்லை எனவும் தெரிவித்தார்.