லண்டனில் சாதனை படைத்த ஈழத்து பெண்!
லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கலந்துகொண்டு ஈழத்து பெண் ஒருவர் வெற்றி ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து வம்சாவழியான தரேன்ஜா ஸ்ரீகரன் என்ற பெண்ணே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெற்ற நடனப் போட்டியிலேயே இவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதீபா சங்கம இந்திய நடனம் மற்றும் இசைக்கான இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே இவர் வெற்றியீட்டியுள்ளார்.
சர்வதேச ரீதியில் இவருக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு பலதரப்பட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பலர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் ஈழத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக ஈழத்து வம்சாவழியை சேர்ந்த பெண் என்றாலும் லண்டனில் வசித்துவரும் அவர், இந்த கலையை உணர்வு பூர்வமாக கற்று அதனை அரங்கேற்றியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
பரதநாட்டியம் என்பது பாரதத்திற்கே உரித்தான ஒரு கலையாகத்தான் பார்க்கப்படுகிறது. அந்த கலையை மேம்படுத்துவற்காக சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் பிள்ளைகளை பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கிறார்கள். அதேசமயம் பரதநாட்டிய ஆசிரியர்களும் அங்கு அதிகமாக காணப்படுகிறார்கள்.
ஈழத்தில் வசிக்கும் சிறார்களுக்கு இவ்வாறான கலைகளில் ஆர்வம் இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரையில் இவ்வகையான கலையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. குறிப்பாக சில ஆசிரியர்கள் இந்தியாவிற்கு சென்று பரதத்தை கற்றுக்கொண்டு வந்துதான் இங்கு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும்போது லண்டனில் மேலைத்தேய கலாச்சாரங்கள் பரவி இருக்கின்ற ஒரு நாட்டில் எம் தேசத்தை சேர்ந்த ஒரு மாணவி சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமன்றி பாராட்டிற்குரியது.