தொல்லியல் திணைக்களம் வடகிழக்கில் இனவாத அரசியல் செய்கின்றது: அருட்தந்தை மா.சத்திவேல்

#SriLanka #Vedukunarimalai Adilingeswarar Temple
Mayoorikka
1 month ago
தொல்லியல் திணைக்களம் வடகிழக்கில் இனவாத அரசியல் செய்கின்றது: அருட்தந்தை மா.சத்திவேல்

நாட்டில் தற்போது இந்துக்களுக்கெதிராக முடுக்கி விடப்பட்டுள்ள இன அழிப்பின் செயல்பாடு தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரும்பும் காலம் தூரத்தில் இல்லை என்பதை கிறிஸ்தவ மத தலைமைகளும் உணர்வது அவசியமென சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 அவரால் இன்றையதினம்(19) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தொல்லியல் திணைக்களம் வடகிழக்கில் பேரினவாத திணைக்களமாக இனவாத அரசியல் செய்வதை தீவிரப்படுத்தி உள்ளது.

 குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மீறி பௌத்த சமயவாத பிக்குகள் இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதித்துள்ளது. அங்கும் கட்டுமானத்தின் போது தொல்லியல் பொருட்கள் நாசப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவைகளை கண்மூடித்தனமாக பார்த்துக் கொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களம் வெடுக்குநாரி மலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களை பொலிசாரின் துணையோடு அவமானப்படுத்தி துரத்தியது மட்டுமல்ல எட்டு பேரை கைது செய்து மீள முடியாத சிறைக்குள் தள்ளி தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பது அடுத்த கட்ட பெரும் பாய்ச்சலுக்கே என்பது பட்டவர்த்தனம். இதனை தடுத்து நிறுத்துவதற்கான பாரிய பொறுப்பு தமிழரின் தேசியம் பேசும் அனைத்து அரசியல் சக்திகளிடத்திலும் உள்ளது. ஆனால், மக்களுக்கு முன்னால் தேசியம் பேசும் பல அரசியல் தலைமைகள் அதனை தமது தேர்தல் அரசியலுக்கான தாரக மந்திரமாக வைத்திருக்கின்றனவே அன்றி நடைமுறையில் அதனை வெளிக்காட்ட தயங்குவது தமிழர்களின் தாயக அரசியல் சிந்தனையையும் அதற்கான செயல்பாட்டையும் தகர்ப்பதற்கே ஆகும்.

 இத்தகைய பச்சோந்தி அரசியல் செய்பவர்களை இனியும் மக்கள் நம்ப தயார் இல்லை. நாட்டின் அனைத்து சந்ததிகளிலும், உயர்ந்த மலைகளிலும் சிறிய, பெரிய, நடுத்தரமான புத்தர் சிலைகளை நட்டு வைத்து பௌத்த நாடாக காட்ட முனையும் பேரின மதவாதிகளுக்கு மத்தியில் தான் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்ட அரசு வடகிழக்கில் பெரும்பாலான இடங்களை எல்லாம் பௌத்தத்துக்கே சொந்தம் எனக் காட்ட தொல்லியல் திணைக்களம் ஊடாக நீண்டகால திட்டம் வகுத்து செயல்படுவது யாவரும் அறிந்ததே.

 1940களில் குடியேற்ற திட்டத்துடன் ஆரம்பித்த பௌத்த சிங்கள மயமாக்கள் தற்போது நேரடியாகவும் மறைமுகமுமான குடியேற்றத் திட்டங்களை உருவாக்கவும் தமிழர்களின் மரபுரிமை பேசும் வரலாற்று இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கவும் எடுக்கின்ற முயற்சி தடுப்பதற்கு அனைத்து அரசியல் தலைமைகளும் கூட்டு செயல்பாட்டிற்கு இணைவது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல் நிலமற்ற இனமாக பாலஸ்தீனர்களைப் போல் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தள்ளப்படுவோம்.

 குறிப்பாக கடந்த இரு வார காலங்களாக வடகிழக்கு தமிழர்கள் தங்கள் உள்ளங்களில் ஆழப்படுத்தி இருக்கும் தமிழர் தாயக அரசியல் உணர்வு கிடக்கைகளை மீண்டும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளின் மறைமுக அரசியல் கொலைக்கு உள்ளான சாந்தனின் வித்துடல் தமிழர் தேசத்திற்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து இறுதி நிகழ்வு வரையில் அதனை வெளிப்படுத்தி துயர் அகற்றியது மட்டுமல்ல தமது அரசியல் நிலைப்பாட்டையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தினர்.

 தற்போது வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது அரச பயங்கரவாதத்தின் கட்டமைப்பான பொலிசாரின் செயற்பாட்டுக்கு எதிராகவும், தொல்லியல் திணைக்களம் புனைந்துள்ள கட்டு கதைகளுக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட எண்மரை விடுவிக்க கோரியும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. இவை எல்லாவற்றிலும் தமிழர்கள் தங்கள் அரசியல் கருத்தியலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இதனை அரசியல் நேர்கோட்டில் நெறிப்படுத்துவது யார்? என்பதே இன்றைய கேள்வி. இதனை உடனடியாக தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்கத் தவறின் யார் ?யாரோ? நரிகளாகவும், காகங்களாகவும் கவ்விச்சென்று உழைப்பாக்கிக் கொள்வர்.

 தற்போதைய சூழ்நிலையில் பேரினவாத அரசியல் வழிநடத்துதலோடு செயல்படும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க சர்வதேச மட்டத்தில் ராஜதந்திர ரீதியில் செயல்படக்கூடிய உள்ளூர் மற்றும் புலம்பெயர் தேசத்தில் வாழும் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். அத்தோடு தாயகத்தின் மக்களுக்கு தொல்லியல் தொடர்பான அறிவூட்டும், தெளிவூட்டும் கருத்தரங்குகள், கூட்டங்கள் என்பவற்றை ஒழுங்கு செய்தலும் வேண்டும். இது உணர்வுபூர்வமான செயல்பாடுகளுக்கு அப்பால் அரசியல் அபிலாசைகளை வென்றிட செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வழி வகுக்கும். 

தொடரும் இன அழிப்பின் புது வடிவங்களுக்கு அறிவியல் ரீதியில் முகம் கொடுக்கவும் துணை செய்யும். அத்தோடு பல்கலைக்கழகங்களில் தொல்லியல் துறையில் பட்டப்படிப்புகளை முடித்து வெளியேருவோரின் வளையமைப்பை உருவாக்கி தாயகம் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவும் செயல் திட்டங்களை உருவாக்குதல் வேண்டும். இன்றைய ஜனாதிபதி இராணுவம் கையகப்படுத்தி இருக்கும் காணிகளில் ஒரு சில ஏக்கர்களை விடுவித்துக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் காணிகளை கையாகப்படுத்தும் ஆக்கிரமிக்கும் இனவாத தொல்லியல் திணைக்களத்திற்கு ஆதரவு வழங்கி அமைதி காப்பது அவரது நரித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

 தற்போது இந்து தமிழ் பக்தர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள இன அழிப்பின் செயல்பாடு தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரும்பும் காலம் தூரத்தில் இல்லை என்பதை கிறிஸ்தவ மத தலைமைகளும் உணர்தல் அவசியம். தற்போது எழுந்துள்ள அவசர சூழ்நிலையில் இந்து பக்தர்களுக்கு ஆதரவாகவும் தாயகம் காக்கவும் சமய அமைப்பு ரீதியில் தலைமைத்துவங்கள் குரல் கொடுப்பதோடு தொடரும் அரசு பயங்கரவாதத்தின் செயல்பாடுகள் எதிராகவும் செயல்பட வேண்டும் கடந்த கால வேற்றுமைகளை தவறுகளை திருத்திக் கொண்டு சமய நல்லிணக்கத்திற்கு கரம் சேர்த்து மக்கள் சக்தி உருவாக களத்தில் செயற்பட வெளிவரல் வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.