இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்
நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.
அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.