தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிக்கு அமர்த்தப்படும் சி.ஐ.டியின் உயர் அதிகாரி
ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தேசிய மக்கள் சக்தி தமது கட்சியின் கட்டமைப்புகளை பரந்தப்பட்ட வகையில் விஸ்தரித்துள்ளதுடன், கட்சியில் பல புதிய குழுக்களையும் உருவாக்கி வருகிறது. இந்த குழுக்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் உயர் பதவிகளில் இருந்த முன்னாள் அதிகாரிகள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியால் ஆரம்பிக்கப்படவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தின் தலைவராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
மே மாதம் இந்த மன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் தேவையில்லை. விசாரணைகளின் மூலம் வெளிப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் தற்போது ஓய்வு பெற்றுவிட்டர். அவர்கள் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தின் தலைவராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரே செயல்படுவார். எமது அரசாங்கத்தில் நிச்சயமாக இந்தச் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம்.‘‘ எனவும் அனுரகுமார கூறியுள்ளார்.