புத்தாண்டிற்குள் பாராளுமன்றத்தைக் கலைக்க நாமல் வியூகம்!

#SriLanka #Parliament #Namal Rajapaksha
Mayoorikka
1 month ago
புத்தாண்டிற்குள் பாராளுமன்றத்தைக் கலைக்க நாமல் வியூகம்!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுனவுக்குள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்காக 113 பேரின் கையெழுத்துகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து கையெழுத்தை பெற்றுக்கொள்வதற்காக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் பெரமுனவுக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிலைப்பாட்டிலேயே கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதி இதுவரையில் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதிலேயே அவர் உறுதியாக உள்ளார்.

 ஆனால், நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு, பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை தயாரித்து, அதற்கு பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

 அதேவேளை தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.