உயர்வான சமூக பாதுகாப்பு திட்டம் நடைமுறையில்

#SriLanka
Mayoorikka
3 weeks ago
உயர்வான சமூக பாதுகாப்பு திட்டம் நடைமுறையில்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

 ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டு மக்கள் எதிர்நோக்கிய கடுமையான பொருளாதாரச் சிரமங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது.

 சமுர்த்தி உதவி, சமுர்த்தி கடன், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு, 100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு என 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 184,098.27 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் நிவாரண உதவித்தொகை தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்கு (பிறப்பு, திருமணம், இறப்பு, நோய்கள், புலமைப்பரிசில்கள், இரட்டைப் பிறப்புகள்) வழங்கப்படும் தொகை 4.52 பில்லியன் ரூபாவாகும். இது தவிர சமுர்த்தி வங்கி இதே காலப்பகுதியில் 59.5 பில்லியன் ரூபாவை கடனாக வழங்கியுள்ளது. ஜனசவிய, சமுர்த்தி போன்ற முன்னைய வேலைத்திட்டங்களில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகாரத்துவத்துக்கு மாறாகவே அரசாங்கம் இந்த சமூகப் பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துகிறது.

 அதன்படி, நாட்டில் 30 இற்கும் மேற்பட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிவாரணத் திட்டத்திற்காக உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அதனை 05 வருட அவகாசத்துடன் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். 2024 மார்ச் 31, க்குள் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கை 1,854,308 ஆக இருக்கும் என்பதையும் கூற வேண்டும் என்றார்.