யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து நலன்புரி முகாம்களும் மூடப்படும்!

#SriLanka #War
Mayoorikka
3 weeks ago
யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து நலன்புரி முகாம்களும் மூடப்படும்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 தற்போது யாழ். மாவட்டத்தில் 3 நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக இடம்பெயர்ந்த 1,502 குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும்.

 அத்துடன் காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.