இந்திய விவகாரம் - மன்னிப்பு கோரிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

#India #Maldives #Minister #flag
Prasu
3 weeks ago
இந்திய விவகாரம் -  மன்னிப்பு கோரிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அவற்றில் ஒன்றாக, மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை கிளப்பியது. 

அந்தப் பதிவில் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தனது பதிவுக்கு மரியம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 

இது முற்றிலும் தற்செயலானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

 பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மரியம் ஷியுனா என்பது குறிப்பிடத்தக்கது.