தமிழக மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர் - அமைச்சர் டக்ளஸ்
தமிழக முதலமைச்சர், புதுக்சேரி முதலமைச்சர் ஆகியோர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் தேர்தல் இடம்பெறுகின்றது. அந்த தேர்தலிற்காக கச்சதீவு விவகாரம் பேசப்படுகின்றது. நாட்டுக்குள் உள் வருபவர்களை கண்காணிக்க காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதுவரை காலமும் இலங்கை கடற்படை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் எடுத்த நடவடிக்கையை பல்வேறு விதமாக பேசினர்.
ஆனால், இந்தியாவே இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டால் நிலைமை சிறந்ததாக அமையும். தமிழக முதலமைச்சர் மற்றும் புதுக்சேரி முதலமைச்சர் ஆகியோர் பேசுவதற்காக என்னை அழைத்துள்ளனர்.
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கும் பட்சத்திலேயே குறித்த சந்திப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்திற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவை தொடர்பில் ஊடகவியலாளர் வினவினார்,
குறித்த நடவடிக்கை மீண்டும் இழுபறிக்குள் சென்றுள்ளது. அதனை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவோம்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்கள் அருகில் உள்ள பிரதேசங்களை கடந்து கொழும்பிற்கு செல்கின்றது. அந்த பொருட்கள் மீண்டும் யாழ் உள்ளிட்ட பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றது. இதனால் வீண் செலவுகள் ஏற்படுகின்றன. அதனை குறைக்கவே முயல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்குமான சேவையை மேற்கொள்வதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் விரும்பாமல் தடுப்பதாக கூறப்படுகின்றமை உண்மையா என அமைச்சரிடம் வினவியபோது அதனை அவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.