அலுவலக நேரத்திற்கு முன்பாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் : மக்கள் விசனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
அலுவலக நேரத்திற்கு முன்பாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் : மக்கள் விசனம்!

அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் இவ்வாறு நேர காலத்துடன் படிப்படியாக மூடப்படுவதாகவும், தாம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மக்கள் கூறி வந்துள்ளனர்.  

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச மக்களால் ஊடகவியலாளருக்கு தகவல் வழங்கிய நிலையில், குறித்த ஊடகவியலாளர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் குறிப்பிடும் விடயங்கள் உண்மையா என்பது தொடர்பில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தார்.  

குறித்த ஊடகவியலாளரும் அதே பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்களை அப்பிரதேச செயலகத்திடம் விண்ணப்பித்திருந்தார். கோரப்பட்ட தகவல்களிற்கு பொருத்தமற்றது என மாத்திரரே  பதில் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காக அப்பிரதேச செயலகத்திற்கு பிற்பகல் 3 மணியளவில் சென்றிருந்தார்.  

குறித்த பிரதேச செயலகத்தின்  செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஒட்டுசுட்டான் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெறும் நிகழ்வுக்கு சென்றுள்ளதாகவும், அவர் வந்த பின்னரே மேன்முறையீடு செய்ய முடியும் என அலவுலகத்தில் இருந்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 3 மணிக்கு நிறைவடைந்தது. 

ஆயினும் குறித்த பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பணியை நிறைவு செய்து அலுவலக வாகனத்தில் தனது வீட்டுக்கு பயணித்துள்ளார்.   குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துகொண்ட ஊடகவியலாளர் பிரதேச செயலகத்திற்கு மீண்டும் சென்றுள்ளார். 

மக்களால் குறிப்பிடப்பட்டது போன்று அலுவலகம் நேரகாலத்தோடு மூடப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதை அவதானித்த ஊடகவியலாளர், குறித்த விடயத்தினை காட்சிகளாக பதிவு செய்ய எத்தணித்துள்ளார்.  

சரியாக 3.30 மணிக்கு படிப்படியாக பிரதேச செயலக ஊழியர்கள் கடமைகளை முத்துக்கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். குறித்த சம்பவத்தை முழுமையாக காட்சிகளாக்கிய ஊடகவியலாளர், 3.50 மணிக்கு குறித்த பிரதேச செலகத்திற்கு சென்று தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் வினவியுள்ளார். 

அலுவலகம் மூடப்படவுள்ளதாகவும், திங்கட்கிழமை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். 4.15க்கு அல்லவா அலுவலகம் மூடப்பட வேண்டும் என அவரிடம் ஊடகவியலாளர் வினவியபோது, வழமையாக 4 மணிக்கே மூடப்படுவதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் யாரும் இல்லையா என அவரிடம் வினவியபோது யாரும் இல்லை என தெரிவித்ததுடன், எம் ஏ பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவரை அணுகுமாறு கூறியுள்ளார். எனினும் அவரிடம் பொறுப்புவாய்ந்த பதில்கள் கிடைக்காத நிலையில் காணிக் கிளைக்கு சென்ற ஊடகவியலாளர் அங்கு பொறுப்புவாந்த உத்தியோகத்தர்கள் உள்ளனரா என வினவினார். 

அங்கு இருந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள், எவரும் இல்லை எனவும், அனைவரும் வெளிக்கள கடமைக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். வெளிக்கள கடமை குறிப்பேடு ஏதும் உள்ளதா என அவர்களிடம் ஊடகவியலாளர் வினவியபோது, அவ்வாறு குறிப்பேடு ஏதும் இல்லை எனவும், அவர்களது நாள் குறிப்பேடு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர். 

சுமார் 40 கிலோமீட்டர் பயணித்து சேவையை பெற்றுக்கொள்ள முடியாத கூடகவியலாளர் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முழுமையாக உறுதி செய்ததுடன், குறித்த சம்பவங்கள் தொடர்பில் முழுமையாக காணொளிகளையும் பதிவு செய்துள்ளார். 

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு குறைகளை முறைப்பாடு செய்யும் கடிதம் ஒன்றை எழுதி கையளித்ததுடன், அதன் பிரதியையும் பெற்றுக்கொண்டு சேவையை பெற்றுக்கொள்ளமையினால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். குறித்த விடயம் பொதுமக்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாததும், துஸ்பிரயோகமானதுமான விடயம் என்பதால் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

4.15க்கு அரச திணைக்களங்கள் மூடப்பட வேண்டும் என மிக அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், சுற்று நிருபமும் வெளியிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் சேவையை இலகுபடுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும் இவ்வாறான பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தவாறே உள்ளது. 

குறித்த அலுவலகத்தில் பிற்பகலில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இருப்பதில்லை என பொதுமக்களால் விசனம் வெளியிடப்பட்டு வந்துள்ளது. நேற்றைய தினம் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என மக்கள் அதிகம் நாடும் சேவையை பெற்றுக்கொள்ள எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் அங்கு இருக்கவில்லை என்பது வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் சேவை பெறும் நேரத்தில், அலுவலக நேரம் மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன். பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. 

குறித்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மீடு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறித்த சம்பவத்திற்கு எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை, ஏனைய திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களிற்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.