ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் : மறைக்கப்படும் உண்மைகள்!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (21.04) இடம்பெறவுள்ளன.
இதனை முன்னிட்டு கொச்சிக்கடை விகாரையிலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் ஒன்று செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாத குழுக்கள் தீவின் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 273 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
இந்த தாக்குதலுக்கு நீதி கோரி சர்வதேசம் உள்பட அனைத்து தரப்பினராலும் பல்வேற சந்தர்ப்பங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் தாக்குதல் தாரிகள் இனங்காணப்படவில்லை. அரசியல் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் குறைக்கூறுகிறார்களே தவிர மக்களின் இன்னல்களை தீர்க்க எவரும் முன்வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அண்மையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில விடயங்களை செனல் -04 ஊடகம் வெளிப்படுத்தியிருந்தது. இருப்பினும் தற்போது அந்த விடயம் மறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாக்குதல் நடந்தபோது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களை தான் அறிவேன் என்று தகவல் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் தாக்குதல் குறித்த உண்மை தன்மை வெளிவரவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.