வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு சுயாதீன நிறுவனம்
வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்திற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளது.
எரிபொருள் வரிசைகளின் காலம் முடிந்துவிட்டது. எமது அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் உயர்தர எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வலுசக்தித் துறையின் இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை நிறுவனமொன்றின் அவசியத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த சுயாதீன நிறுவனத்தை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், LPG, LNG எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும் என்றார்.