டயானாவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? பாராளுமன்றத்தில் காஞ்சன கேள்வி

#SriLanka
Mayoorikka
1 week ago
டயானாவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? பாராளுமன்றத்தில் காஞ்சன கேள்வி

இலங்கை பிரஜையல்லாத டயானா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? பொதுத் தேர்தலின் போது கட்சியின் வேட்பு மனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். 

ஆகவே சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது இராஜாங்க அமைச்சர் டயனா கமகேமவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினையொன்று எழுந்துள்ளது.

 டயனா கமகே இலங்கை குடியுரிமையற்றவர் என்பதால் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு அவரே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? என்ற பிரச்சினைகள் எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியை பதிவு செய்யும் போது அவர் இலங்கை பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். 

இந்த நாட்டை சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியை பதிவு செய்ய முடியாது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவிலும் அவரா? கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற உணவகத்தில் கதைக்கும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது என்றார்.

 இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது இதில் பிரச்சினைகள் கிடையாது என்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர , அப்படியில்லை, இப்படி இல்லை என்று கூறினாலும் இது நீதிமன்றம் செல்லும் பிரச்சினையாகும். நீதிமன்றத்தில் அது தொடர்பில் கூற வேண்டி வரும். 

 வேட்பு மனுக்களில் யார் கையெழுத்திட்டது என்றும் பரிசோதிக்க வேண்டி வரும். இதனால் விவாதங்களுக்கு நேரத்தைச் செலவிடுவதை விடுத்து, இந்த விடயத்திற்கு முகம்கொடுப்பதற்கு தயாராகுங்கள். உங்களுக்கு இந்த விடயத்தில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது. அவ்வாறு நடக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன்.

 எவ்வாறாயினும் இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் கட்சியை உருவாக்கியிருந்தால்,அவர் அந்தக் கட்சியை உங்களிடம் கொடுத்திருந்தால்,வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால், அவருக்கும் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையே ஏதாவது உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தால் பிரச்சினை இருக்கும். இப்போதே சிறந்த சட்டத்தரணி குழுவினரைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

 எங்கள் பக்கத்திலிருந்து வந்தவர்களை சட்டத்தரணிகளாக வைத்திருக்க வேண்டாம். அவர்களிடம் சட்ட ஆலோசனைகளைப் பெற்றால் பிரச்சினைகள் தீவிரமடையும் என்றார்.