ஒ.பி.சி., பட்டியலில் 3ம் பாலினத்தவர்கள்: மத்திய அரசு முடிவு

Keerthi
2 years ago
ஒ.பி.சி., பட்டியலில் 3ம் பாலினத்தவர்கள்: மத்திய அரசு முடிவு

திருநங்கைகள், திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு,மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், திருநங்கைகளை 3ம் பாலினத்தவர்களாக அங்கீகரித்ததுடன், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டின் பலன்களை 3ம் பாலினத்தவர்களும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், திருநங்கைகளை, ஓ.பி.சி., பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ள சமூக நீதித்துறை அமைச்சகம், அதனை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து உள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னர், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின்னர் அமலுக்கு வரும். கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம் பல்வேறு அமைச்சகம் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய கமிஷன் அமைப்பிடம் விரிவாக ஆலோசனை நடத்தியது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.