தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை

Prabha Praneetha
2 years ago
தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை

மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 மகாளய அமாவாசை  தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர்.

இந்த நிலையில் நாளை கோவில்களுக்கு தரிசனத்துக்கு செல்லவும், புண்ணிய தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் உள்பட அனைத்து கோவில்களின் திருக்குளங்களிலும் பொதுமக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் நாளை தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.

நாளை (புதன் கிழமை) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை (புதன் கிழமை) முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி தங்குவது வழக்கம். அந்த வகையில் பக்தர்கள் தங்கு வதை தடுக்க திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.