கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்!

Prabha Praneetha
2 years ago
கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்!

சென்னை ஐஐடியில் 45 நாய்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் சென்னை ஐஐடியில் 45 நாய்கள் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த 45 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

மோசமான நிலையில் மெலிந்த தேகத்தோடு இந்த நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே இந்த நாய்களின் மரணம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் கேபி ஹரிஷ் என்ற பெங்களூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நாய்களின் மரணத்திற்கு சென்னை ஐஐடி ரிஜிஸ்டர் ஜேன் பிரசாத்தான் காரணம் என்று கூறி சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


கழுத்தில் செயின் போட்டு, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். 24 மணி நேரமும் செயினில், கூண்டுக்குள் அந்த நாய்கள் இருந்துள்ளன. நாய்களை பராமரிக்க ஆட்கள் இல்லை.

இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாமல் அந்த நாய்கள் கடுமையாக கஷ்டப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 17ம் தேதியே தெரு நாய்களை டாக் பார்க்கில் வைக்க கூடாது என்று சென்னைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் ஐஐடி நிர்வாகம் இதை பின்பற்றவில்லை. பல நாய்கள் இன்னும் உள்ளே இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரில் கூறப்பட்டுள்ளது.