பெண்கள் பற்றி புரிந்துகொள்ள வேண்டியவை

Keerthi
2 years ago
பெண்கள் பற்றி புரிந்துகொள்ள வேண்டியவை

படுக்கும் போது ஒரே மாதிரி யாராலும் படுக்க முடியாது. மல்லாந்து படுப்போம், கவிழ்ந்து படுப்போம். இரண்டு பக்கமும் சரிந்து படுப்போம்,சுருண்டு படுப்போம். 
இரவு படுத்து காலை எழுந்தால் கிட்டத்தட்ட இந்த வகை அனைத்திலும் படுத்திருப்போம். ஆனால் கர்ப்பம் ஆனால் பெண்களுக்கு கவிழ்ந்து படுக்க முடியாத நிலை ஏற்படும். முன்னே வயிறு தள்ளி இருக்கும் போது வயிற்றை பாயில் அல்லது மெத்தையில் அழுத்தி படுக்க பயமாய் இருக்கும். 

மேலும் வயிறு பெரிதாகிவிட்டால் அப்படி படுக்கவும் முடியாது.ஒருநாள் முழுக்க கவிழ்ந்து வயிறு கட்டிலில் படவே கூடாது என்று தூங்கி பாருங்கள். செம கடியாக இருக்கும். அப்படி இருப்பது மனநிலையை பாதிக்கும். கர்ப்பமான பெண்கள் அனைவரும் இந்த மனநிலை பாதிப்பை லேசாகவேனும் அடைகிறார்கள். 

இன்ஸ்டா வீடியோவில்  புதிதாய் குழந்தை பெற்ற பெண்  ஒருவர் “பத்து மாதங்களுக்கு பிறகு கவிழ்ந்து படுக்க போகிறேன்” என்று வீடியோ பதிவிட்டிருந்தார். 
அதற்கு எக்கச்செக்க லைக்ஸ். நிறைய ஷேர்கள். கீழே கமெண்ட் செக்சனில் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேலான பெண்கள் கமெண்ட் செய்திருந்தார்கள். 
அனைத்து கமெண்டுகளிலும் உணர்ச்சிமயம் தெரிந்தது. அது மனதை தொடுவதாய் இருந்தது. 

அதில் சில கமெண்டுகளை தமிழில் கொடுக்கிறேன். 

1.வயிற்றில் எட்டு மாதகுழந்தையோடு இருக்கிறேன். நீங்கள் படுப்பது மாதிரியான belly sleeping எப்போது என்னால் முடியும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

2.என் மூன்றாவது சிசேரியனுக்கு பிறகு என்னால் பத்து மாதம் முடிந்த உடன் தூங்க முடியவில்லை. இன்னும் நிறைய மாதங்கள் வருடங்கள் கவிழ்ந்து படுக்க காத்திருக்க வேண்டுமோ என்று முழிக்கிறேன்.

3.கர்ப்பமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் வயிறு கட்டிலில் படும்படிதான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு இன்னொருவர் பதில் சொல்கிறார் என் டாக்டரும் கவிழ்ந்து படுக்கலாம் என்றே சொன்னார். நான் எட்டு மாதங்கள்வரை கவிழ்ந்தே படுத்தேன். ஒன்றும் ஆகவில்லை 

4.குழந்தை பெற்று உடனே இப்படி கவிழ்ந்து படுத்தால் தாய்பால் வெளியே வந்து நம்மை நனைக்கும். 

5.சிசேரியன் செய்வதற்கான ஊசியின் வலி இன்னமும் முதுகில் இருப்பதால் குழந்தை பிறந்தும் வயிறு கட்டிலில் படும்படி படுக்கும் இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறேன். 

6.ஆஹா ! குழந்தை வெளியே வந்த பிறகு முதன் முறையாக இப்படி கவிழ்ந்து படுக்கும் சுகமே சுகம். 

7.இப்போது வயிற்றில் குழந்தையை வைத்திருக்கிறேன். மற்றநாள்களில் நான் கவிழ்ந்து மட்டும்தான் தூங்குவேன். இனி எப்போது அப்படி படுக்க போகிறேன் என்று மனம் ஏங்குகிறது. 

8.எனக்கு இன்னும் ஒருமாதம் இருக்கிறது. டெலிவரி முடித்தவுடன் இப்படி படுக்க முடிந்தால் உடனே இப்படித்தான் படுக்க வேண்டும். இப்படி படுக்கும் ஆசுவாசத்தை மிஸ் செய்கிறேன். 

9. எனக்கு சிசேரியன். இப்படி கவிழ்ந்து படுக்க இன்னும் பத்து பதினோரு மாதங்கள் காத்திருக்க வேண்டும். 

10. நான் இந்த அனுபவத்தை கடந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இது கொடுக்கும் நிம்மதியை என்னால் உணரமுடிகிறது. 

11. உங்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்பதை இதை அனுபவித்து 24 வருடங்கள் ஆனாலும் என்னால் துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது. 

12. எனக்கும் இப்படி படுக்க ஆசைதான். ஆனால் என் மார்பு கட்டிக் கொண்டு வலிக்கிறது. 

13. தாய்பால் வெளியே கசியும் பிரச்சனையால் இப்போது வரை  கவிழ்ந்து படுக்காமல் அப்படி படுக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன். 

14. நான் நான் நான் நான்... நானும் இப்படி கவிழ்ந்து படுக்க வேண்டும். இப்பவே.. இந்த விநாடியே படுக்க வேண்டும். சீக்கிரம் இந்த நிலைக்கு நான் வரவேண்டும். 

15. நான் கருக்கலைப்பு செய்து கொண்டு வருவதற்கு இன்னொரு காரணத்தை கொடுத்திருக்கிறிர்கள். 

16. படுக்கையில் தாய்பால் படும் என்பதால் இப்படி படுக்க ஆசைப்பட்டாலும் என்னால் படுக்க முடியவில்லை. 

17. சிசேரியனும், தாய்பால் கொடுத்தலும் சேர்த்து இப்படி படுக்க விடாமல் என்னை தடுக்கின்றன. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. 

18. என்னது குழந்தை பிறந்த பிறகு தூங்குவதா? தூங்குகிறீர்களா? அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே? 

19.கவிழ்ந்து படுத்தால் என் மார்புகள் செங்கலைப் போல் கட்டியாக வலியெடுத்து என்னை படுக்க விடாமல் செய்கிறதே.

20. எப்போது இப்படி படுப்போம் என்று இச்சையாக இருக்கிறது. அந்த அளவுக்கு கவிழ்ந்து படுக்கும் ஆசை என்னை ஆட்கொள்கிறது. 
பெண்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் இருக்கிறதே பல ஆண்களுக்கு தெரியாது என்பதால் இதை கொடுக்கிறேன்.

உங்கள் அக்காவோ, தங்கையோ, மனைவியோ குழந்தை பெற்றதில் இருந்து இரண்டு வருடங்கள்வரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை கூடவே இருந்து கவனித்து கொள்ளுங்கள். ஒருவர் சொன்னார் “ குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மா அத்தை சித்தி மாமியார் கணவன் என்று அனைவரும் அன்பை பொழிகிறார்கள். 

ஆனால் குழந்தை பெற்ற பிறகு வரும் உபாதைகளின் போது “இதெல்லாம் இருக்கும்தான் நீதான் கடந்து வரவேண்டும்” என்று ஒதுங்கிவிடுகிறார்கள். சில சமயம் அப்படியே உடலும் மனமும் சோர்ந்து போய் என்னடா வாழ்க்கை என்று சுருண்டு விடுகிறேன். எல்லா பெண்களுக்கும் இதுதான் நிலை போல” என்றார். புதிதாய் திருமணம் ஆன, திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.