இன்று மஹா சிவராத்திரி. மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு தெரியுமா?

#history #God
இன்று மஹா சிவராத்திரி. மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு தெரியுமா?

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி அருள் புரிந்தார்.

புராணங்களின்படி, சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள். இதனையடுத்து அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காக ஓடியபோது, ​​அவர் கொடிய விஷத்தை குடித்தார். ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவ பெருமானின் தொண்டை நீலமாக மாறியது, இதன் காரணமாக, அவர் நீல நிற தொண்டையான ‘நீல்காந்தா’ என்று அறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இது போல தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாதத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார். அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார்.

இவ்வாறு இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது.

உடனே தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

சிவன் மற்றும் சக்தியின் திருமணத்தின் புராணக்கதை மகாசிவராத்திரி பண்டிகை தொடர்பான மிக முக்கியமான புராணக்கதைகளில் ஒன்றாகும். சிவன் தனது தெய்வீக மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதை கதை விவரிக்கிறது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.