``முதலீடு செய்ங்க, வீட்டிலிருந்தே சம்பாதிங்க”-பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்

#Tamil Nadu #Police #Women
``முதலீடு செய்ங்க, வீட்டிலிருந்தே சம்பாதிங்க”-பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி முதுநிலை பொறியாளருக்கான பட்டப்படிப்பு முடித்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்தவர்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க முதுநிலை பொறியியல் படித்த பெண்ணொருவரிடம், ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், `வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பணியாற்றி, நல்ல வருமானம் பெறலாம்’ என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, வங்கி கணக்கு எண் மூலம் பண பரிவர்த்தனையும் செய்துள்ளனர்.

தொடர்ந்து ரூ.2.80 லட்சம் மோசடி செய்ததாக அப்பெண் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது அவர் பேசுகையில், “வீட்டு உபயோகப் பொருட்களை மொத்தமாக கொடுத்து, அதை விற்க சொல்வார்கள். மொத்த பொருட்களை அவர்கள் கொடுக்கும் பொருளை, நாம்தான் முதலீடு செய்து வாங்க வேண்டியிருக்கும். அப்படி நாம் முதலீடு செய்து பெறும் பொருளை, வாங்கியபின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்று முடிக்க வேண்டுமென டார்கெட் வைப்பார்கள்.

அப்படி நாம் விற்றுவிட்டால், கிடைக்கும் லாபத்தில் நமக்கு அதிக பங்கு இருக்கும். ஒருவேளை நாம் விற்கவில்லை என்றால், அது நமக்குதான் நஷ்டம் என்று சொல்லி நம்மிடமிருந்து வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க மாட்டார்கள். ஆனால் விற்கமுடியாத அளவுக்கான டைம் டார்கெட்டாக அது இருக்கும். அதனால் ஒருகட்டத்தில், நாம் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். அப்படித்தான் நான் இழந்தேன்” என்றார் வேதனையுடன்.

இந்தக் குற்றத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இதுபோன்று மக்கள் வேறு யாரையேனும் பணத்தை இழக்க நேரிட்டால் உடனடியாக அவர்கள் காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள 1930 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டால் இழந்த பணத்தை மீட்கலாம் அல்லது மேலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.