சிறுபுள்ளியிலிருந்து பெரிய மரமாக வளர்ந்த ட்விட்டர் - ஓர் சுவாரஸ்ய வரலாறு

#technology #Article #today
சிறுபுள்ளியிலிருந்து பெரிய மரமாக வளர்ந்த ட்விட்டர் - ஓர் சுவாரஸ்ய வரலாறு

தேசத்தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்கள் கருத்துகளை கூற அதிக அளவில் பயன்படுத்தி வரும் ட்விட்டர் இணையதளம் உருவானதே ஒரு சுவாரஸ்ய வரலாறுதான்.

ஒரு தொழிலை செய்துகொண்டிருந்த ஒருவர் வாரக்கடைசிகளில் உருவாக்கிய ஒருதளம்தான் ட்விட்டர் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 2006ஆம் ஆண்டில் ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்ஸியின் எண்ணத்தில் எஸ்.எம்.எஸ்.-ஸை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ட்விட்டர். ஒரு குழுவாய் இருக்கும் நண்பர்கள் மற்றவர்கள் செய்வதை அறிந்து கொள்வதற்கு இது உதவும் என்பதே நோக்கம்.

ஒடியோ என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த டோர்ஸி தனது எண்ணத்தை அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் எவான் வில்லியம்ஸிடம் எடுத்துரைத்தார். அதன் பின்னர் அந்த தளத்தில் கூடுதல் நேரம் செலவிட அவருக்கு அனுமதி கிடைத்தது. இந்த தளத்திற்கு ட்விட்டர் என பெயர் சூட்டியவர் நோவா கிளாஸ் என்ற மென்பொருள் பொறியாளர்தான்.

ட்விட்டர் தளத்தில் ஜாக் டோர்ஸி தனது முதல் ட்விட்டை 2006ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பதிவு செய்தார். ட்விட்டர் தளம் பரிசோதனையில் இருந்தபோதே ஒடியோ நிறுவனம் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. அப்போது முதலீட்டாளர்கள் வசமிருந்து நிறுவனத்தை ஜேக் டோர்ஸி, பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகியோர் திரும்ப வாங்கினர். அவர்கள் நிறுவனத்தை திரும்ப வாங்கிய விதம் சர்ச்சைக்குள்ளான போதிலும் அவர்கள் ட்விட்டருக்கான உரிமைகளை பெற்றனர். இதன் பின்னர் ட்விட்டர் தளத்திற்காக ஆப்வியஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் ட்விட்டர் தளம் எஸ்.எம்.எஸ். சார்ந்து இருந்ததால் அதில் 140 எழுத்துகளுடனே செய்திகள் பதிவு செய்யப்பட்டன. சுருக்கமாக கருத்துகளை பதிவு செய்யும் இந்த தளம் அதிக நேரமில்லாத பிரபலங்களுக்கு மிகவும் பிடித்துபோய்விட அது மிக வேகமாக வளர்ந்தது. அதிக பயனாளர்களை கொண்டிருந்தாலும் ட்விட்டர் பெரும்பாலும் இழப்பையே சந்தித்து வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தை தற்போது முழுமையாக தன்னுடையதாக்கியிருக்கிறார் எலான் மஸ்க்.