ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா முயற்சிக்கவில்லை - சட்டசபையில் பரபரப்பு அறிக்கை தாக்கல்

Prasu
1 year ago
ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா முயற்சிக்கவில்லை - சட்டசபையில் பரபரப்பு அறிக்கை தாக்கல்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை.2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.

அத்துடன் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் அவரை மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்து சென்றுள்ளனர்.அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் இரகசியமாக்கப்பட்டன.ஜெயலலிதா இறந்த நாள் தொடர்பிலும் சாட்சியங்கள் அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளன.

ஜெயலலிதா இறந்தது 2016 டிசம்பர் 4ம் திகதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் என்று தெரிவிக்கப்பட்டது.எனினும் 2016 டிசம்பர் 5ம் திகதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

ஜெயலலிதாவுக்கு எஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை.

சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான எஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.

இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது

அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முன்னாள் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்அந்த நேரத்தில் மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.

ஜெயலலிதா எந்த நேரத்திலும் மருத்துவமனையில் இருந்து வீடு செல்லலாம் என்ற பொய்யான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டிருந்தது.

அத்துடன் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியது என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்திருந்தால், ஜெயலலிதாவின்  உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணைக்குழுவின் 561 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் இறுதியில் 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும், 'காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா' என்ற திருக்குறளுக்கு மு.வரதராசன் எழுதியை தெளிவுரையும் மேற்கோள் காட்டப்பட்டு, அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது.