பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளின் வழியை இந்தியா பின்பற்றுகிறது - இந்திய செய்தித்தளம் விமர்சனம்

#SriLanka #India #Pakistan
Prasu
1 year ago
பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளின் வழியை இந்தியா பின்பற்றுகிறது - இந்திய செய்தித்தளம் விமர்சனம்

பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளின் வழியை இந்தியா பின்பற்றுகிறது என்ற அடிப்படையில் நியூஸ் கிளிக் என்ற இந்திய செய்தித்தளம் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இதற்காக பாகிஸ்தானிய கவிஞர் ஒருவரின் கருத்தான நீங்கள் எங்களை போல மாறிவிட்டீர்கள் என்ற கருத்தை செய்தித்தளம் கோடிட்டுள்ளது.

பாகிஸ்தான் பாரிய பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது. கோதுமை மாவின் விலை கிலோ ஒன்று, 150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவாக உள்ள நிலையில், குடும்பம் ஒன்றுக்கு 10 ரொட்டிகள் தேவை.

எனினும் குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம் 500 ரூபாவாக உள்ளது என்று செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

எனவே வெளிப்படையாக அந்த நாட்டுக்கு வெளிப்புற ஆதரவு தேவைப்படுகிறது என்றும் மிச்சிகனின் பொதுக் கொள்கைப் கல்லூரியின் பேராசிரியர் ஜான் சியோர்சியாரி தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆதிக்கம், 'அரசியலில் இஸ்லாம்' மற்றும் அமெரிக்க செல்வாக்கு என்பன அங்கு வியாபித்துள்ளன.

பாகிஸ்தான் முதல் சுதந்திரத்தின் போது, நாட்டின்; ஸ்தாபகர் முகமது அலி ஜின்னா தனது உரையின்போது, மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தினார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாகிஸ்தான் முன்னேற்றமடையும் என்று அவர் குறிப்பிட்டார்

எனினும் இந்தக் கொள்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை,இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியாக்கள் மற்றும் இஸ்லாமிய பிரிவினரான காடியானிகள் துன்புறுத்தப்பட்டனர்.

அரசியலில் மதம் காட்சியில் ஆதிக்கம் செலுத்தியது என்று செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்து தமிழர்கள் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.

இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில்; ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள ராஜபக்ச விமான நிலையத்துக்கு தேசத்தின் செல்வத்தை செலவு செய்தமை மற்றும் உர இறக்குமதியை நிறுத்தியமை போன்ற எதேச்சதிகாரத்தின் உயர்தர முடிவுகள் எட்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டின் பெரும் பேரழிவிற்கு வழிவகுத்தன.

இந்தநிலையில் இந்தியாவில், நரேந்திர மோடியின் தலைமையால் நாடு இதுபோன்ற நெருக்கடியை சந்திக்கவில்லை என்று வகுப்புவாத சக்திகள் பெருமை பேசுகின்றன.

அத்துடன் நிச்சயமாக, இந்தியாவின் நெருக்கடி பாகிஸ்தான் அல்லது இலங்கையில் உள்ள அதே விகிதத்தில் இல்லை.

இருப்பினும், பொருட்களின் விலைவாசி உயர்வு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதுகை உடைக்கிறது என்று நியூஸ்கிளிக் செய்தித்தளம் கூறுகிறது.

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள்

இரண்டு அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு மாறாக, இந்தியா மதச்சார்பின்மையின் உறுதியான நிலையில் செயற்பட்டது,

எனினும் 1980 களில், வகுப்புவாதம் ஒரு சக்திவாய்ந்த வழியில் அதன் தலையை உயர்த்தியது. இது மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் காரணியாக தற்போது மாறியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.29 வீதத்தில் இருந்து 4.72 வீதமாகவும் ஆகவும், சராசரி வேலையின்மை 5.5வீதத்தில் இருந்து  7.1 வீதமாகவும் மாறியுள்ளது.

தெற்காசியாவை ஆட்சி செய்து கொள்ளையடித்த ஆங்கிலேயர்கள், இந்துக்களையும் முஸ்லிம்களையும் அல்லது சிங்களவர்களையும் தமிழர்களையும் பிரித்து பிளந்து ஆட்சி அதாவது டிவைட் என்ட் றூல் என்ற விதையையும் விதைத்தனர். இந்தக் கொள்கையின் விளைவுதான் பிரிவினையாக மாறியது.

பாகிஸ்தான் பிளவுபடுத்தும் அரசியலின் பிடியில் விழுந்தபோது இந்தியா ஒரு நவீன தேசிய அரசின் பாதையில் இறங்கியது.

முன்னதாக பல பாகிஸ்தானியர்கள் இந்தியாவை ஒரு முன்மாதிரியாகக் கருதினாலும், கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியா, பாகிஸ்தானின் வழியைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.

இதனை பறைசாற்றும் வகையில், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மறைந்த பாகிஸ்தான் கவிஞர் ஃபஹ்மிதா ரியாஸ் மிகவும் பொருத்தமாக, கருத்தை வெளியிட்டதாக நியூஸ்கிளிக் குறிப்பிட்டுள்ளது,

தும் பில்குல் ஹம் ஜெய்சே நிகில் என்ற உருது மொழியில் அமைந்த இந்த கருத்து நீங்கள் எங்களைப் போல் கீழ் இறங்கி வருகிறீர்கள் என்று இந்தியாவை பார்த்து கேட்கும் கருத்தாக அமைந்திருந்தது என்றும் இந்திய செய்தித்தளமான நியூஸ்கிளிக் சுட்டிக்காட்டியுள்ளது.