தீபாவளித் திருநாள் தோன்றியக் கதை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
தீபாவளித் திருநாள் தோன்றியக் கதை!

இந்துக்களின் கலாச்சாரம் ஏராளமான பண்டிகைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். 

ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். 

images/content-image/1699752811.jpg

நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது  அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். 

அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும்,  துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரக அசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.

images/content-image/1699752864.jpg

சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி,  ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். 

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.  

images/content-image/1699752923.jpg

வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.  

தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம், எகிப்து,  பாபிலோன்,  கிரேக்கம்,  பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து வணிகம் நிமித்தம் வெளிநாடு சென்ற இந்தியர்கள் உலகின் பலப் பாகங்களிலும், தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இன்று உலகம் முழுவதுமே இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.