2025ம் ஆண்டு மேஷ ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

மேஷ ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி உங்கள் பன்னிரண்டாம் வீடான மீன ராசியில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
சனியின் இந்த பெயர்ச்சி சமயத்தில் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. உங்கள் கடந்த கால வினைப் பயன்களுக்கு ஏற்ப நீங்கள் பலன்களை அனுபவிக்கும் காலக் கட்டமாக இது இருக்கும்.
பொதுவாக நாம் நல்லதை மட்டுமே செய்திருப்போம் என்று சொல்ல முடியாது. நமது தீய வினைகளுக்கும் பலனை அனுபவிக்கும் நிலை காணப்படலாம்.
எனவே, இந்த காலக்கட்டத்தில் நீங்கள் தொழில், உத்தியோகம், கல்வி, பொருளாதாரம் உறவுகள் போன்ற உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சில பல தடைகளை அனுபவிக்க நேரலாம்.
சில விஷயங்களில் நீங்கள் பின்னடைவுகளையும் சந்திக்க நேரலாம். இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
உத்தியோகம் :
உத்தியோகத்தில் உடனடியான முன்னேற்றம் காண வாய்ப்பு இல்லை என்றாலும் படிப்படியாக வளர்ச்சி இருக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு அதிக பணிகள் வழங்கப்படலாம்.
குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வது நல்லது.
அதன் மூலம் நீங்கள் படிப்படியாக முன்னேற இயலும். உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். எனவே உங்கள் இலக்குகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
திட்டமிட்டு செயல்படுங்கள். வேலை மாற்றம் விரும்புபவர்கள், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். வேலை மாற்றத்திற்கு இது உகந்த நேரம் அல்ல. என்றாலும் அவசியம் மாற்றம் தேடுபவர்கள் உங்களுக்கு அளிக்கப்படும் பதவி, பொறுப்புகள் வேலை அளிக்கும் நிறுவனம் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள்.
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கும் வேலையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் மெதுவான முன்னேற்றம் என்றாலும் நீங்கள் தடையின்றி முன்னேறலாம். தொழில் செய்பவர்களுக்கு இது சிறந்த காலக்கட்டம். உங்கள் திறமைகளை பயன்படுத்தி நீங்கள் தொழிலில் முன்னேறுவீர்கள்.
கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். புதிதாகவும் கூட்டுத் தொழில் தொடங்கலாம். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம். நீங்கள் உங்கள் தொழில் விஷயமாக தொழில் முனைவோரை சந்திக்கலாம். அவர்களின் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்.
காதல் / குடும்ப உறவு :
குடும்ப நபர்களுடன் உறவுகளை சரியான முறையில் பராமரிப்பது உங்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கலாம். அவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம்.
அவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் எழலாம். இது உங்களுக்கு விரக்தி மற்றும் மன வேதனையை ஏற்படுத்தலாம். இதுவும் கடந்து போகும் என்று அமைதியாக விட்டுவிடுவது நல்லது.
ஒளிவு மறைவு இன்றி பேசுவது பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் காதல் உறவை திருமண உறவாக நீங்கள் மாற்ற நினைக்கலாம்.
உங்கள் முயற்சியில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சூழ்நிலையை பொறுமையுடன் கையாள வேண்டும். சமரச பேச்சு வார்த்தை மூலம் உறவில் மோதல் வராமல் தடுக்கலாம்.
திருமண வாழ்க்கை :
கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவன் மனைவி உறவு பாதிக்கப்படலாம். என்றாலும் சுமுகமாக பேசி அவற்றை தீர்த்துக் கொள்ளலாம். பரஸ்பர புரிந்துணர்வு மூலம் உறவை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டு வாழ்க்கைத் துணையின் கருத்துக்கு மதிப்பு அளிப்பதன் மூலம் உறவில் பிணைப்பு கூடும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.
உணர்ச்சி வசப்படாமல் அணுகுவது நல்லது. இது உங்கள் உறவை வலுப்படுத்த உதவும். இந்த காலக்கட்டம் அமைதியான குடும்பச் சூழலுக்குச் சாதகமாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பாருங்கள். நல்ல உறவை வளர்க்க அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது/
மாணவர்கள் :
கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் படிப்பில் சிறந்து விளங்கலாம். ஆராய்ச்சி சார்ந்த கல்வி பயில்பவர்கள் சிறப்பாக செயலப்டலாம். வெளி நாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மாணவர்கள் தொடர் முயற்சிகளின் மூலம் வெற்றி பெறலாம்.
பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஆரோக்கியம் :
உடலில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை / சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம் முக்கியம்.
எனவே உங்கள் மன ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே மன அமைதிக்கு யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்கனவே உள்ள உடல் உபாதைகளுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



