புத்தாண்டுக்குப் பின்னர் கூடும் நாடாளுமன்றம் : அவை நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் நாளை முதல் முறையாக கூடவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் நாளை அமைச்சரவை கூடவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதி அமைச்சினால் இரண்டு புதிய அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டங்களை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளன.