கழுத்து வலிக்குகாரணம் என்ன?

#Health
கழுத்து வலிக்குகாரணம் என்ன?

தசைகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள், எலும்புகள், தசைநார்கள் என எல்லாம் இணைந்த பகுதிகள் உங்கள் கழுத்தும், தோள்பட்டைகளும். இவற்றில் எதில் பிரச்னை வந்தாலும் கழுத்திலோ, தோள்பட்டையிலோ வலி ஏற்படலாம். சில வலிகள் சாதாரண மானவையாகவும், சில அவசர சிகிச்சையாகக் கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டியவையாகவும் இருக்கக்கூடும். கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகளுக்கான காரணங்களையும், அவற்றைத் தவிர்க்கும் முறைகளையும் பற்றிப் பார்ப்போம்.

கழுத்து வலிக்கான காரணங்கள்

எலும்புகளிலும், மூட்டு இணைப்புகளிலும் தென்படுகிற அசாதாரண நிலைகள், விபத்து தவறான நிலைகளில் நிற்பது, நடப்பது, உட்காருவது மற்றும் படுப்பது, உடல்சிதைவு நோய்கள், கட்டிகள், தசைப் பிசகு. இதேபோல் தோள்பட்டையானது பந்துகிண்ண மூட்டு வடிவத்தைக் கொண்டது. இதைச் சுற்றியுள்ள மென்மையான சவ்வுப் பகுதி, ஏதேனும் காயங்கள் ஏற்படும்போது இறுகிப்போகும்.  மூட்டின் இயக்கம் பாதிக்கப்படும். தோள்பட்டையின் அமைப்பானது இத்தகைய திடீர் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும்வகையில்தான் இருக்கும் என்றாலும்  சில நேரங்களில் அப்படி யில்லாமலும் போகக்கூடும்.

அதனால் கடுமையான வலி ஏற்படும். மேலும் அதிக உடலுழைப்பின் காரணமாக ஏற்படுகிற தசைப்பிசகு, தசைநாண் அழற்சி, தோள்மூட்டு இணைப்பின் நிலையற்ற தன்மை, இடப்பெயர்வு, கழுத்து அல்லது மேல் கை எலும்பு முறிவு, ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் பாதிப்படைந்து, இயங்க முடியாத நிலையான ரேடிகுலோபதி பிரச்னையாலும் தோள்பட்டையில் வலி இருக்கலாம்.

என்ன பரிசோதனைகள் தேவை?

எக்ஸ் ரே செய்வதன் மூலம் பாதிப்புள்ள பகுதியில் இரண்டு எலும்புகளுக்கு இடையிலுள்ள இடைவெளி, கீல்வாதத்துக்கான வாய்ப்புகள், கட்டிகள், மூட்டு நழுவுதல் பிரச்னை, எலும்பு முறிவு மற்றும் முதுகெலும்புகளில் உள்ள பாதிப்புகள் போன்றவற்றைக் கண்டறியலாம். எம்.ஆர்.ஐ சோதனையில் நரம்பு தொடர்பான பிரச்னைகளை துல்லியமாக அறியலாம்.  தவிர தசைநாண்கள் மற்றும் தசை நார்கள் தொடர்பான பிரச்னைகளையும் அறியலாம். சி.டி.ஸ்கேன் சோதனையிலும் பாதிப்பை கண்டறியலாம்.

சிகிச்சைகள்…

ஆரம்ப கட்ட வலிகளுக்கு வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். வலியின் தீவிரத்தைப் பொறுத்து தசைகளைத் தளர்த்தும் மருந்துகளும், தூக்கம் தரும் மருந்துகளும் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்படும். கூடவே ஐஸ் ஒத்தடங்கள் செய்யச் சொல்வார்கள் மருத்துவர்கள். வலி அடுத்த கட்டத்துக்குப் போகும்போது கார்டிகோ ஸ்டீராய்டு ஊசிகள் தேவைப்படலாம். பிசியோதெரபி பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றுக்கெல்லாம் சரியாகாத வலிகளுக்கு எளிமையான அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.