உள்ளாட்சி தேர்தல்: கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதி

#India
உள்ளாட்சி தேர்தல்: கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதி


தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் விவரங்களை வெளியிட்டுயிருந்தது.

இதனையடுத்து, கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.