மீண்டும் இணையும் ‘சூரரைப் போற்று’ கூட்டணி

#Cinema
Prabha Praneetha
3 years ago
மீண்டும் இணையும் ‘சூரரைப் போற்று’ கூட்டணி

கோலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா, ‘வாடிவாசல்’ படத்தில் நடித்து முடித்தபின், சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்கள் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.