மாநிலங்களுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் சப்ளை -அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

#India
Prabha Praneetha
3 years ago
மாநிலங்களுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் சப்ளை -அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று பேசப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி  இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று பேசப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

மாநிலங்களுக்கு சுமார் ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மூன்று லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். 

மேலும், ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த ஆலோசனையின்போது, உருமாறிய கொரோனாவின் தோற்றத்தைக் கண்காணிக்க, நிலையான மரபணு வரிசைப்படுத்தலின் அவசியம் குறித்து பிரதமர் பேசியதாகவும், இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு இப்போது நாடு முழுவதும் 28 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் பிரதமரிடம் கூறியதாகவும், பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

“இந்த ஆய்வக நெட்வொர்க் மருத்துவ தொடர்புக்காக மருத்துவமனை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. மரபணு கண்காணிப்புக்காக கழிவுநீர் மாதிரியும் பரிசோதனை செய்யப்படுகிறது. 

கொரோனா பாசிட்டிவ் சாம்பிள்களை இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்புடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது