தாய் தந்தை மற்றும் மக்கள் நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்

#Actor #India
Prasu
2 years ago
தாய் தந்தை மற்றும் மக்கள் நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்

தனது பெயரை பயன்படுத்தி, கூட்டங்களை நடத்த, தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 27ம் திகதிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தச் செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என, விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குத் தொடர்ந்தார்.

நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர். பத்மனாபன், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளர் ஷோபா சேகர் (தாய்), தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் கே.ஜோஸ்பிரபு, மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முனிச்சாலை ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தொடரப்பட்ட இந்த வழக்கு, ஆகஸ்ட் 23ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்குத் தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகாதரால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் திகதிக்குத் ஒத்தி வைத்து, அன்றைய தினம் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.