நடக்க இருந்த "சார்க் மாநாடு " ரத்து

#India #SriLanka #Afghanistan #Taliban #Maldives
Prasu
4 years ago
நடக்க இருந்த "சார்க் மாநாடு " ரத்து

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினார்கள். அவர்கள் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவையில் ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட சிலரும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் அரசு அனைத்து தரப்பினரும் உள்ளடக்கியபடி இருக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை அளித்துள்ளது. அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் நியூயார்க்கில் நடக்க இருந்த தெற்காசிய கூட்டமைப்பான சார்க் நாடுகளின் மாநாட்டில் தலிபான்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியதால் அந்த மாநாடு திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன.

சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வருகிற 25-ந் தேதி நியூயார்க்கில் நடக்க இருந்தது. இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக தலிபான்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையை மற்ற உறுப்பு நாடுகள் ஏற்கவில்லை. மாநாட்டில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வெற்று நாற்காலியை வைக்கலாம் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பாகிஸ்தான் தனது கோரிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. மாநாட்டில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது.

இதையடுத்து நியூயார்க்கில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சார்க் செயலகம் கூறும்போது, ‘அனைத்து உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் சார்க் வெளியுறவு மந்திரிகள் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4