நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு! LTTE அமைப்புக்கு தொடர்பா?
நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள பிரபல வைத்தியசாலையில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (28) மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை − உப்புவெளி பகுதியில் வசிக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே, இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் கைக்குண்டை வைப்பதற்கு, கைக்குண்டை வழங்கி நபர், தனக்கு 6 நாட்கள் பயிற்சிகளை வழங்கியதாக சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணி கழற்றப்பட்டு, நுளம்பு சுருள் ஒன்று அதில் பொருத்தப்பட்டிருந்ததுடன், நுளம்பு சுருளை பற்ற வைப்பதன் ஊடாக கைக்குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாகவே, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வறுமையிலுள்ள இந்த சந்தேகநபரின் நிதித் தேவையை பூர்த்தி செய்து, இந்த கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, கொழும்பு புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருகோணமலைக்கு இன்று சென்றுள்ளனர்.
திருகோணமலை − உப்புவெளி பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்பட்ட பிரிவில் கடமையாற்றியவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக கூறப்படும் காணியை, முதலாவது சந்தேகநபர் அதிகாரிகளுக்கு இன்று காண்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.