ஒரு குட்டி கதை -அமைதி

Prasu
2 years ago
ஒரு குட்டி கதை -அமைதி

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த நாட்டு அரசனின் வழக்கமாகும்.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைந்து தருபவர்களுக்கு மிக சிறந்த பரிசு வழங்கப்படும் என அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.
அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்தியிருந்தார் கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபத்திலித்து பார்ப்பதற்கே ரம்மியமாக அமைந்திருந்தது அந்த ஓவியம். வேறொருவர் மலர்களை வரைந்திருந்தார்.பார்த்தவுடனே பறிக்கத்தூண்டும் வகையில் மலர்கள் அமைந்திருந்தன. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களுக்கு தோன்றியவாறு அமைதியை தங்களது ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் மலையிலிருந்து ஆக்ரோஷமாகக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரைய பட்டிருந்தது. அது மட்டுமா இடியுடன் கூடிய மழைவேறு பெய்து கொண்டிருந்தது, அந்த ஓவியத்தில்.இது அமைதியே அல்ல, சற்று உற்று பார்க்கும்போது நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
இந்த ஓவியத்தை வரைந்தது யார்??
சம்பந்தப்பட்ட ஓவியர் மன்னனின் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக இருக்கிறதென்பதில் சந்தேகமே இல்லை........ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி..இடியுடன் கூடிய மழை...கீழே மரத்தில தனது கூட்டில் குஞ்சுகளுடன் பறவை ......ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது, என அந்த ஓவியரை மன்னன் கேட்டான்.
அதற்கு அந்த ஓவியர் மன்னனை உற்று பார்த்துக்கொண்டே , மன்னா....சப்தமும் போராட்டமும், பிரச்சினையும் இல்லாத இடத்தில இருப்பது அமைதி அல்ல.....இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்துகொண்டு எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி, இல்லையா மன்னா??? அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் மன்னா? என்றதும் மன்னனுக்கு உண்மை உறைத்தது.
சபாஷ்.....அமைதிக்கு அற்புதமான விளக்கம் ....என்று கூறி கை தட்டினான் மன்னன்.
அத்துடன் நில்லாமல். அந்த ஓவியத்திற்கே அமைதிக்கான முதல் பரிசைக் கொடுக்கவும் செய்தான் அந்த மன்னன்.
அனைத்தும் சவுகர்யங்களும் அமையப்பெற்று எந்தவித இடையூறும் , பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும், என்ற மனதுடனும் விடா முயற்சியுடனும் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே...அவர்களிடம் இருப்பதுதான் அமைதி..
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்டவேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய்க் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி..சாத்தியமில்லாத இடத்தில சாத்தியப்படுவது தான் அமைதி....நாமும் அவ்வாறான அமைதி நிலையை அடைய முயல்வோமாக.....!!