இலங்கையில் மீண்டும் தொடரும் ஆசிரியர் போராட்டம் !
அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான நேற்றைய சந்திப்பில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று (13) கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
மூன்று கட்டங்களின் கீழ், சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது இரண்டு கட்டங்களாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது சம்பள பிரச்சினையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஒரு கட்டமாகவும், எஞ்சிய 2 கட்டங்களை 2023ம் ஆண்டு ஜனவரியிலும் தீர்ப்பதாக பிரதமர் தலைமையிலான தரப்பினர், உறுதி வழங்கியுள்ளனர்.
எனினும், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு இணக்கம் வெளியிடாது, அதிபர் − ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பிரதமர் தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, குறித்த தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டிருந்தன.