கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் அறிவிப்பு
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்த மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை முன்வைத்தார்.
தனக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் நீதிப் பேராணையை பிறப்பிக்குமாறுகோரி பிரதிவாதி வசந்த கரன்னாகொட மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் 5 மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றிருந்தன.
தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும், ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அமலன் லியோன், ரொஷான் லியோன், அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் உள்ளிட்டோரும் இவ்வாறு கடத்தப்பட்டிருந்தனர்.