முட்டையின் விலையும் அதிகரிப்பு
முட்டை உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் கோழி உணவு மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாக, ஒரு முட்டையின் விற்பனை விலை 20 ரூபாய் முதல் 21 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வளர்ப்பு சங்கத்தின் (AIPASL) தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோழிகளுக்கு உணவளிக்கப் பயன்படும் தானியங்களின் விலை உயர்வால் பெரும்பாலான கோழி வளர்ப்பாளர்கள் முட்டையின் விலையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.
கோழிகளுக்குத் தேவையான சோளத்தை அரசாங்கம் இறக்குமதி செய்தது. ஆனால் தற்போதைய நெருக்கடி காரணமாக, அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து முட்டை உற்பத்திக்கான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கோழி வளர்ப்பு வீழ்ச்சியடையும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEPA) எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AIEPA) பொருளாளர் விஜேய அல்விஸ் தமது கருத்தில், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 17 ரூபாவாக உள்ளது.
இதனையடுத்து சந்தையில் முட்டை ஒன்று 18 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இந்தநிலையில் ஒரு ரூபாய் லாபத்துடன், கோழி வளர்ப்பாளர்கள் தங்கள் செலவுகளை நிர்வகிக்க முடியவில்லை என்று கூறினார்.