சிவபூஜையில் பன்றி நுழைந்த வரலாறு

#spiritual #God
சிவபூஜையில் பன்றி நுழைந்த வரலாறு

மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.

இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.

அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.

அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.

அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.

அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.

அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.

இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.

பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார்.