இலங்கையில் எரிவாயு வெடிப்பினால் தீப்பற்றி எரிந்த வீடு- அச்சத்தில் மக்கள்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் எரிவாயு  வெடிப்பினால்  தீப்பற்றி எரிந்த வீடு- அச்சத்தில் மக்கள்!

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு வெடித்ததில் வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துயரகரமன சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த விபத்துச் சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் தெரியவருகையில்,

மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பு ஊடாக நீரை சூடாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதுடன், திடீரென வீடு முழுவதுமாக தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்று பிள்ளைகளையும், தனது மருமகளையும், பேரப்பிள்ளையையும் வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த குறித்த தாய், அயலவர்களின் உதவியையும் நாடியுள்ளார்.

எனினும் , கூரை தகரத்தினாலும், ஏனையவை பலகையினாலும் கொண்ட வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறித்த வீடு முழுமையாக தீயில் எரிந்துள்ளது.

இதனால், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும், ஆடைகளும் இந்த தீயினால் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதுதொடர்பில் கிராம சேவகர் மற்றும் கற்பிட்டி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி சகாத் ஒன்றியத்தினர், கிராம அமைப்புக்களுடன் இணைந்து , பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தங்குவதற்கான தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும், நிரந்தரமாக வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் கற்பிட்டி சகாத் ஒன்றித்துடன் 0716080071, 0774277092 தொடர்பு கொள்ளுமாறு அதன் தலைவர் முஹம்மட் ரியாஸ் கேட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.