புதிய திரிபுகள் உருவாகும் ஆபத்து – சுகாதார பிரிவு எச்சரிக்கை

Prabha Praneetha
2 years ago
புதிய திரிபுகள் உருவாகும் ஆபத்து – சுகாதார பிரிவு எச்சரிக்கை

கொரோனா நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும் எதிர்காலத்தில் புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.

ஆகவே மக்கள் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளரும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகமுமாக விசேட வைத்திய நிபுணர் ஹேம்நத ஹேரத் தெரிவித்தாா்.

இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டு முடிந்தளவு விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டால் மாத்திரமே நாட்டிலிருந்து கொரோனா நிலைமையை இல்லாதொழிக்க முடியும்.

சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றியும் நோய் நிலைமை பரவலடையுமாக இருந்தால், இந்த நிலைமை முடிவில்லாமல் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டெல்ட்டா தொற்று பரவலடைய ஆரம்பித்தபோதும் இத்துடன் இந்த தொற்று பரவலடையாது என்பதே பல தரப்பினரின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், புதிதாக ஒமிக்ரோன் என் புதியவொரு திரிபு  பரவலடைய ஆரம்பித்தது.

ஆகவே, எதிர்காலத்திலும் புதிய திரிபுகள் ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது. என்றாவதொரு நாள் தொற்று நிறைவுக்கு வந்தால் மாத்திரமே கொரோனா நோய் நிலைமை முடிவடைந்து விட்டது என்று கூற முடியும்.

அவ்வாறு இல்லாமல் தற்போதே புதிய திரிபுகள் உருவாகாது என்று கூற முடியாது. ஆகவே ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.