இலங்கை ஹோட்டல்களின் அதிரடி முடிவு!

#SriLanka #Milk Powder
Nila
2 years ago
இலங்கை  ஹோட்டல்களின் அதிரடி முடிவு!

பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீர் விற்பனை செய்வதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், அதனை நுகர்வோரினால் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

சிற்றுண்டிசாலைகளின் பிரதான வருமான மார்க்கமாக பால் தேநீர் விற்பனை காணப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பால்மா தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களுக்காக சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் கடந்த காலங்களில் எதிர்நோக்கியமையினால், சில சிற்றுண்டி உரிமையாளர்கள் பால் தேநீர் விநியோகத்தை நிறுத்தியிருந்தனர்.

ஏதேனும் ஒரு வகையில், பால் தேநீரை நுகர்வோர் கோரும் பட்சத்தில், அதற்கான விலையை குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளரினால் தீர்மானிக்க முடியும் என அவர் கூறுகின்றார்.

30 ரூபாவாக காணப்பட்ட பால் தேநீர் ஒரு கோப்பை, தற்போது 60 முதல் 70 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பால் தேநீர் விற்பனையானது, பால் மா விலை அதிகரிப்புடன், 60 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, பிளாஸ்டிக் கோப்பைகளிலேயே, தேநீர் விநியோகிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் கோப்பையின் விலை 5 ரூபா எனவும் அவர் கூறுகின்றார்.


இதனால், பால்மா தேநீர் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.