இரு பிள்ளைகளையும் மரத்தில் கட்டி வைத்து மிளகாய் போட்டு சித்திரவதை செய்த தந்தை விளக்கமறியலில்

#Court Order
Prathees
2 years ago
இரு பிள்ளைகளையும் மரத்தில் கட்டி வைத்து மிளகாய் போட்டு சித்திரவதை செய்த தந்தை விளக்கமறியலில்

இரண்டு பிள்ளைகளையும் மரத்தில் கட்டி வைத்து மிளகாய் போட்டு சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (03) மாலை ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சித்திரவதை செய்யப்பட்ட  இரண்டு குழந்தைகளும் தாயும் மருத்துவ அறிக்கைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஹட்டன் டிக்கோயா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் குடாகம சமகி மாவத்தையை சேர்ந்த 36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் நேற்று (02) பிற்பகல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவியைத் தாக்கியுள்ளதுடன், 6 வயது மகன் மற்றும் 7 வயது மகளை மரத்தில் கட்டிவைத்து மளகாய் தூளை பூசி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் வீட்டிற்கு சென்று தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளை இதேபோன்று தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்தநபர் வாங்கி  வரச் சொன்ன பொருளுக்கு மேலதிகமாக, இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு விறகு கட்டு வாங்கி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபர் இரு குழந்தைகளையும் இவ்வாறு சித்திரவதை செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் பிரதேசவாசிகள் விடுவித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (02) இரவு இரண்டு பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.

இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு மனைவியை தாக்கியமை மற்றும் பிள்ளைகளை சித்திரவதை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

கணவனின் சித்ரவதையை தாங்க முடியாத மனைவி, கணவரிடம் இருந்து விவாகரத்து கோர நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்