இன்று தங்கம்மா, அப்பாக்குட்டி அவர்கள் பிறந்தநாள் 7-1-2022

#history #today
இன்று தங்கம்மா, அப்பாக்குட்டி அவர்கள் பிறந்தநாள் 7-1-2022

தங்கம்மா, அப்பாக்குட்டி (1925.01.07 - 2008.06.15) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்பாக்குட்டி; தாய் தையற்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் கற்று, 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகி 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.

இவர் "பண்டிதை" என அழைக்கப்பட்டதுடன் 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்படப் பல இடங்களில் சமயச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றியுள்ளார். இவர் 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பளைத் துர்க்கை அம்மன் திருத்தலத்தைப் பெரிய கோயிலாகக் கட்டியெழுப்பியதுடன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவர் 1977 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டு இராஜ கோபுரம், சித்திரத் தேர், மண்டபங்கள், அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்தத் தடாகம் என சிறந்த அமைப்புக்களை உருவாக்கி ஆலயத்தை ஒரு சமூக நிறுவனமாக்கினார்.

இவர் பெண்மைக்கு இணையுண்டோ?, வாழும் வழி ஆகிய நூல்களை இயற்றியுள்ளதோடு செஞ்சொற் செம்மணி , சிவத்தமிழ்ச் செல்வி, சைவ தரிசினி, திருவாசகக் கொண்டல், திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, சிவஞான வித்தகர், துர்க்கா துரந்தரி, செஞ்சொற்கொண்டல், திருமொழி அரசி, தெய்வத் திருமகள் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

மேலும் வரலாறு சார்ந்த தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.