புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு சுற்றுலா சென்ற சிறுமி உயிரிழப்பு!
திருகோணமலை – இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (22) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமி திருகோணமலை-பாசல்மாவத்த -ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10 வயது) எனவும்,
நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு தனது வகுப்பாசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்றபோது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய சிறுமி அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.