இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு எடுத்த முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட பல இந்திய மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்பாடு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என அவர் கூறினார். ஒருசில நாட்டுப்படகுகளும் இதனுள் இருப்பதாக அறிகிறோம்.இலங்கையின் சட்டம் என்று வரும்போது நாட்டுப்படகு விசைப்படகு என எல்லாம் ஒன்றுதான். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அரசியல் செல்வாக்குள்ள தமிழ்நாட்டு முதலாளிகளே இழுவைமடி தொழிலை இங்கு ஊக்குவிக்கின்றனர். அவர்களது படகுகளே இதனால் பாதிப்படையும் என அவர் கூறினார்.