அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார்: ஐக்கிய மக்கள் சக்தி
ஸ்ரீலங்கா அரசாங்கத்தை உடனடியாக பொறுப்பேற்க தயார் என ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 29 ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விவசாயத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு விவசாயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை உள்ளடக்கி இந்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான குழுவினர் இன்னும் சீனாவில் இருந்து சேதனப்பசளைகளை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அது கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் விவசாயிகள் அடைந்துள்ள நட்டத்தை ஈடு செய்வதற்கு அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வது போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.